ஜன.28-ல் கடலூரில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கு நேர்முகத் தேர்வு

By செய்திப்பிரிவு

கடலூர்: கடலூரில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கு நாளை மறுநாள் (வரும் 28-ம் தேதி) நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.

கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணியிட நேர்முக தேர்வில், 19 முதல் 30 வயதுக்குட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். மருத்துவ உதவியாளர் பணிக்கு பி.எஸ்சி நர்சிங், ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி அல்லது லைஃப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்சி ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி) ஆகிய கல்வித் தகுதி இருக்க வேண்டும். இப்பணிக்கு ரூ. 15 ஆயிரத்து 435 ஊதியம் வழங்கப்படும்,

ஓட்டுநர் பணியிடத்துக்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும், பேட்ஜ்(Badge) உரிமம் எடுத்து இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். 162.5 செ.மீ உயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். இப்பணிக்கு ரூ.15 ஆயிரத்து 235 ஊதியம் வழங்கப்படும்.

இப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கடலூர் அரசு மருத்துவமனையில் நாளை மறுநாள் (வரும் 28-ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இது தொடர்பாக 044-28888060, 044-28888075, 044-28888077, 9154251148, 9154251630 ( காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ) தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கடலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE