தாம்பரத்தில் பிப்.1 முதல் 8 வரை ஏர்மேன் பணிக்கு தேர்வு முகாம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: தாம்பரம் விமானப் படை நிலையத்தில் ஏர்மேன் பணிக்குத் தேர்வு முகாம் பிப்.1 முதல் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய விமானப் படையின் தாம்பரம் விமானப் படை நிலையத்தில் ஏர்மேன் பணிக்கான (Medical Assistant Trade) தேர்வு முகாம் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

முகாமில் பங்கேற்க விரும்புவோர், பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்தவர்கள் மற்றும் மருந்தியலில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பிளஸ் 2 தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். திருமணமாகாத இளைஞர்கள் 1999-ம் ஆண்டு ஜூன் 27 முதல் 2004-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதிக்குள்ளும், திருமணமான இளைஞர்கள் 1999-ம் ஆண்டு ஜூன் 27 முதல் 2002-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும்.

குறைந்த பட்சம் 152.5 செமீ உயரம் இருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி அடிப்படையில் ஆட்தேர்வு நடைபெறும். மேலும், விவரங்களுக்கு www.airmenselection.cdac.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகியோ அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE