திருப்பூர்: மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் திருப்பூரில் பிப்ரவரி மாதம் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
மேயர் ந.தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார்பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேயர் ந.தினேஷ்குமார் பேசும்போது, “திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், பிப்ரவரி மாதம் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்தியா மற்றும் வெளிநாட்டின் பிரபலமான 800-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
எனவே,கல்லூரி மாணவர்கள் உட்பட ஒருலட்சம் பேரை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க செய்ய வேண்டும். இதற்காக தமிழகம் மட்டுமின்றி கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் விளம்பரம் செய்ய உள்ளோம்” என்றார். உதவி ஆணையர்கள், வேலை வாய்ப்புத் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.