புதுடெல்லி: “வெறும் புரோகிராமிங் மற்றும் பொறியியல் மட்டும் அல்ல... அதையும் கடந்ததுதான் தொழில்நுட்பம்” என்று கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். டெல்லியில் கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து பேசிய அவர், அதனை பாராட்டினார். அதோடு இந்திய தேசம் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான பெரிய மையமாக மாறி வருவது குறித்தும் பேசி இருந்தார். அப்போது தொழில்நுட்ப துறையில் புதிதாக அடியெடுத்து வைப்பவர்களுக்கு தங்களது அட்வைஸ் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுந்தர் பிச்சை பதில் அளித்தார்.
“தொழில்நுட்பம் ஆனது வெறும் புரோகிராமிங் மற்றும் பொறியியல் மட்டும் அல்ல. அதையும் கடந்து செல்லும் அளவுக்கு விரிவானது. அதனால் அது குறித்த முழுமையான சிந்தனை மிகவும் அவசியம். அது மற்றவர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க உதவும்” என தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் உலக அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இதனை அவர் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.