அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு புதிய வலைதளம்: தமிழக அரசு அறிவிப்பு

By ஜெ.கு.லிஸ்பன் குமார்

சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் கடந்த 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் வெளிநாடுகளில் வேலைசெய்ய விரும்புவோருக்கு தேவையான பணிகளை செய்து வருகிறது. மத்திய அரசின் குடிபெயர்வோர் சட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டு வெளிநாட்டு வேலைகளில் பணியாளர்களை பணியமர்த்துவதற்கு வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது.

இந்நிறுவனத்தின் www.omcmanpower.com என்ற இணையதளம் தனியார் டொமைனில் இருந்து தற்போது தமிழக அரசின் டொமைனுடன் www.omcmanpower.tn.gov.in என்ற புதிய இணையதளமாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, வெளிநாடு செல்ல விரும்புவோர் இந்த புதிய இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE