சென்னை: வெளிநாடுகளில் வேலை தேடுவோர் பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களின் பாதுகாப்பான மற்றும் சட்ட சேவைகளை மட்டுமே பயன்படுத்துமாறு சென்னையில் உள்ள மத்திய அரசின் குடிபெயர்பவரின் பாதுகாவலர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களை குறி வைத்து, பதிவு செய்யப்படாத போலி ஆட்சேர்ப்பு முகவர்கள் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக ஏமாற்றி ரூ.2 முதல் ரூ.5 லட்சம் வரை அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்தப்பதிவு செய்யப்படாத, சட்டவிரோத முகவர்கள் வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து உரிமம் பெறாமல் செயல்படு கிறார்கள்.
மேலும், பேஸ்புக், வாட்ஸ்-அப், குறுஞ்செய்தி மற்றும் பிற ஊடகங்கள் மூலம் இந்த சட்டவிரோத முகவர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் வாட்ஸ்-அப் மூலம் மட்டுமே தொடர்பு கொள்வதால், அவர்களுடைய இருப்பிடம், அடையாளம், வேலைவாய்ப்பின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துவது கடினமாக உள்ளது. இத்தகைய முகவர்கள் கடினமான, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை கொண்ட நாடுகளுக்கு வேலை செய்ய தொழிலாளர்களை அழைத்துச் செல்கின்றனர். எனவே, வெளிநாடுகளில் வேலை தேடுவோர் பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்களின் பாதுகாப்பான மற்றும் சட்ட சேவைகளை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கூடுதல் தகவல், புகார்களுக்கு... இதுகுறித்து, கூடுதல் தகவல்கள்மற்றும் புகார்களுக்கு குடிபெயர்பவரின் பாதுகாவலர் - சென்னை, வெளியுறவு அமைச்சகம், ராயலா டவர்ஸ் எண் 2, பழைய எண் 785, புதிய எண் 158, அண்ணா சாலை, சென்னை - 600 002.தொலைபேசி எண் :044- 28521337, 044- 28522069, 044- 28525610,அலைபேசி எண்: 90421 49222 (மின்னஞ்சல்: poechennai1@mea.gov.in, poechennai2@mea.gov.in) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு அறியலாம். அத்துடன், www.emigrate.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.