டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு: குரூப்-4 உள்பட 19 தேர்வுகளுக்கு அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: அடுத்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில், குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட 19 போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஓராண்டில் என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்பன உள்ளிட்ட விவரங்களை உள்ளடக்கிய வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணை டிசம்பர் 15-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால், அன்றைய தினம் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது தொடர்பான செய்தி, 'இந்து தமிழ் திசை' நாளிதழில் நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி நேற்று மாலை தனது இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டது. இதில், குரூப் 1, குரூப்-2, குரூப்-4 உள்பட 19 போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. முதலில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்படுகிறது. இதற்கான போட்டித்தேர்வு ஜுன் மாதம் நடைபெற உள்ளது. காலியிடங்கள் எத்தனை என்ற விவரம் கொடுக்கப்படவில்லை.

வன காப்பாளர் தேர்வுக்கான (1,264 காலியிடங்கள்) அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, தேர்வு ஜுன் மாதம் நடத்தப்பட உள்ளது. குரூப்-1 தேர்வுக்கான (65 காலியிடம்) அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு ஜூலை மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெறுகிறது. குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான (1,294 காலியிடம்) அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது. அதற்கான முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தேர்வு கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE