இரண்டாம்நிலை காவலர் பணிக்கு 2.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 3,359 இரண்டாம்நிலை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. 2.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

தமிழகம் முழுவதும் காவல், சிறை, சீர்திருத்தம், தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 3,359இரண்டாம்நிலை காவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம்கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிட்டது.

அதன்படி, ஆயுதப்படை - 780, தமிழ்நாடு சிறப்பு காவல் படை - 1,819, இரண்டாம்நிலை சிறை காவலர்- 86, தீயணைப்பாளர் - 674 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு 2.24லட்சம் ஆண்கள், 57,208 பெண்கள்,41 திருநங்கைகள் உட்பட மொத்தம்2.81 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

இந்நிலையில், சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உட்படதமிழகம் முழுவதும் 250 மையங்களில் இதற்கான முதன்மை எழுத்து தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதி தேர்வு நேற்று காலை நடந்தது. சுமார் 2.50 லட்சம் (83 சதவீதம்) பேர் தேர்வு எழுதினர். சென்னையில் 10 மையங்களில் 12,303 பேர் தேர்வு எழுதினர்.

உடல் தகுதி தேர்வு: தேர்வு மையத்துக்குள் செல்போன், டிஜிட்டல் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. தீவிர சோதனைக்கு பிறகே தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். காலை 10 முதல் மதியம் 12.40 மணி வரை தேர்வு நடைபெற்றது. அடுத்த கட்டமாக உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விரைவில் நடக்க உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE