டிச.16-ல் வேலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

By செய்திப்பிரிவு

வேலூர்: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை யொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் டிகேஎம் மகளிர் கல்லூரி இணைந்து டிச.16-ம் தேதி ( சனிக்கிழமை ) அன்று வேலூர் டிகேஎம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறும்.

இதில், 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறி யியல், நர்சிங், பார்மஸி ஆகிய கல்வி தகுதியில் தேர்ச்சி பெற்று வேலை தேடும் நபர்கள் கலந்து கொள்ளலாம். தனியார் துறைகள் மூலம் நடத்தப் படும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு, வேலை பெறுபவர்களுக்கு அவர்களது வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

எனவே, தனியார் துறை பணிகளுக்கு தகுதியும், விருப் பமும் உள்ள நபர்கள் டிச. 16-ம் தேதி நடைபெற உள்ள முகாமில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடர்பாக மேலும் விவரம் தேவைப்படுவோர் 0416-2290042, 94990-55896 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE