ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு டிச.1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நகர வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ராமநாதபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு www.drbramnad.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் மட்டுமே வரும் டிச. 1-ம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு வரும் டிசம்பர் 24-ம் தேதி நடைபெற உள்ளது. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (10 2 3 முறையில்) மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். வைகுந்த் மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம், புனே வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்களும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் நடப்பாண்டில் நேரடி பயிற்சி, அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர்ந்துள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்துப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE