பங்கு வர்த்தகத்தில் முறைகேடு; மெகுல் சோக்ஸிக்கு ரூ.5 கோடி அபராதம் - 15 நாட்களுக்குள் செலுத்த செபி நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பங்கு வர்த்தகத்தில் முறைகேடு செய்த வழக்கில், ரூ.5.35 கோடி அபராதத்தை 15 நாட்களுக்குள் செலுத்துமாறு மெகுல் சோக்ஸிக்கு செபி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வைர வியாபாரியான நீரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் சோக்ஸியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி கடன் பெற்று மோசடி செய்துவிட்டு 2018-ம் ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்றனர். நீரவ் மோடி லண்டனுக்கும் மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா தீவுக்கும் தப்பிச் சென்றனர்.

பிரிட்டன் காவல் துறையால் கைது செய்யப்பட்ட நீரவ் மோடி, தற்போது லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் உள்ளார்.

இருவரையும் இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, மெகுல் சோக்ஸி அவரது கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் பங்கு வர்த்தகத்தில் முறைகேடுகள் செய்ததாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபி ரூ.5.35 கோடி அபராதம் விதித்தது. மேலும், அவர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட 10 ஆண்டுகளுக்குத் தடை விதித்தது.

ஆனால் மெகுல் சோக்ஸி அபராதத் தொகையை இதுவரை செலுத்தவில்லை. இந்நிலையில், அபராதத் தொகையை 15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மெகுல் சோக்ஸிக்கு செபி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE