தாமதமான விமானம்: ஜப்பான் சென்று பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட தைவான் விமான நிறுவன தலைவர்!

By செய்திப்பிரிவு

டோக்கியோ: தைவானில் இருந்து ஜப்பானுக்கு செல்ல வேண்டிய விமானம் தாமதம் ஆனதைத் தொடர்ந்து பயணிகளிடம் விமான நிறுவனத் தலைவர் மன்னிப்பு கேட்டது சமூக வலைதளங்களில் பேசும்பொருளாகி இருக்கிறது.

கிழக்காசிய நாடான தைவானில் இயங்கி வருகிறது ஸ்டார்லக்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனம். இந்த விமான நிறுவனத் சேர்ந்த விமானம் ஒன்று கடந்த வாரம் ஜப்பானுக்கு 3.45 மணியளவில் புறப்பட வேண்டி இருந்தது. ஆனால், வானிலை காரணமாகவும், பாராமரிப்பு காரணமாகவும் விமான புறப்பட வேண்டியதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. விமானம் இல்லாததால் இரவு 11 மணி வரை பயணிகள் நரிடா விமான நிலையத்திலேயே தவித்தனர். உணவு உண்ணாமல், உறங்காமலும் பயணிகள் இருந்ததாக தைவான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பின்னர் மறுநாள் காலை 6 மணி அளவில்தான் விமானம் ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் தலைவர் சாங் குயோவே தனது விமான நிறுவனத்தின் செயலுக்கு மன்னிப்பு கேட்பதற்காக ஜப்பான் சென்று பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து சாங் குயோவே கூறும்போது, “புயல் காரணமாக முதல் விமானமும், விமான பராமரிப்பு காரணமாக இரண்டாவது விமானமும் தாமதம் ஆனதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பயண கட்டணத்தை முழுமையாக திருப்பி தருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், சாங்கின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத பயணிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். அதேவேளையில், விமானம் தாமதம் ஆனதற்காக ஜப்பான் சென்று மன்னிப்பு கேட்ட சாங்கை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE