ஊழியர்கள் பணி நீக்கத்துக்கு மத்தியில் சுந்தர் பிச்சைக்கு ரூ.1,850 கோடி ஊதியம் வழங்கிய ஆல்பபெட்!

By செய்திப்பிரிவு

கலிஃபோர்னியா: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சிக்கன நடவடிக்கை களை காரணம் காட்டி உலக அளவில் தனது கிளைகளிலிருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.

இதனை கண்டித்து இந்த மாத தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான கூகுள் ஊழியர்கள் லண்டன் அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சைக்கு 2022-ல் ஒட்டுமொத்த ஊதியமாக 22.6 கோடி டாலர் வழங்கப்பட்டுள்ளது. இது, சராசரி ஊழியரின் சம்பளத்தை விட 800 மடங்கு அதிகமாகும் என ஆல்பபெட் பங்குச் சந்தையிடம் அளித்த ஆவணங்களில் சுட்டிக்காட்டியுள்ளது. சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்ட மொத்த ஊதியத்தில் 21.8 கோடி டாலர் (ரூ.1,800 கோடி) பங்குசார்ந்த பரிசுகளும் அடங்கும்.

ஆல்பபெட் நிறுவனம் உலகளவில் 12,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக இவ்வாண்டு ஜனவரியில் அந்நிறுவனம் அறிவித்தது. இது, அதன் உலகளாவிய பணியாளர்களில் 6 சதவீதத்துக்கு சமமாகும். இந்நிலையில் சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டில் வாரி வழங்கப்பட்டுள்ள பல கோடி டாலர் சம்பளம் சாதாரண பணியாளர்களுக்கும், தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களுக்கும் இடையிலான இமாலய அளவிலான ஊதிய முரண்பாடுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என பணியாளர் கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு இடையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மற்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் பேர்ட் சாட்பாட்டை உருவாக்கும் பணிகளில் ஆல்பபெட் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE