பங்குச்சந்தை | சென்செக்ஸ் 813 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (திங்கள்கிழமை) வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 541 புள்ளிகள் சரிவடைந்து 59,889 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 135 புள்ளிகள் சரிந்து 17,692 ஆக இருந்தது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து லாபத்தில் நிறைவடைந்த பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் கடும் சரிவுடன் தொடங்கியது. காலை 10:17 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 813.96 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,617.04 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 244.75 புள்ளிகள் சரிவடைந்து 17,583.25 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று இன்போசிஸ், டாடா கன்சல்டன்சி ஆகியவைகளின் பலவீனமான காலாண்டு வருவாய் காரணமாக பிற தகவல்தொழில்நுட்ப பங்குகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை பவர் கிரிடு கார்ப்பரேஷன், நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்டஸ்இன்ட் பேங்க், டைட்டன் கம்பெனி, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. இன்போசிஸ், டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE