ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை: ரிசர்வ் வங்கி

By செய்திப்பிரிவு

மும்பை: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிதிக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் ரெப்போ விகிதம் தற்போதுள்ள 6.50 சதவீதமாகவே தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எதிர்பார்த்த நிலையில் இதனை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரெப்போ விகிதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். இதன் காரணமாக வீடு, வாகனம், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் இப்போதைக்கு உயராது எனத் தெரிகிறது. ஏனெனில், வழக்கமாக ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான விகிதத்தை உயர்த்தினால், வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் மீதான வட்டி விகிதத்தை உயர்த்தும்.

கடந்த நிதி ஆண்டில் படிப்படியாக வெவ்வேறு காலங்களில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது ரிசர்வ் வங்கி. இந்தச் சூழலில் இந்த கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வளர்ந்த நாடுகளில் வங்கித் துறையில் நிலவும் சூழலைக் கூர்ந்து கவனித்து வருவதாகவும், பல வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட்களை தேட ரிசர்வ் வங்கி மையப்படுத்தப்பட்ட போர்ட்டலை அமைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE