மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்க்கிழமை வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 114 புள்ளிகள் (0.19 சதவீதம்) உயர்ந்து 59,106 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 38 புள்ளிகள் (0.22 சதவீதம்) உயர்வடைந்து 17,398 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வார முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:01 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 48.41 புள்ளிகள் உயர்வடைந்து 59,039.93 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 17.25 புள்ளிகள் உயர்வடைந்து 17,377.00 ஆக இருந்தது.
ஆட்டோ, மூலதனப்பங்குகள், வங்கி மற்றும் நிதிப்பங்குகளின் உயர்வு காரணமாக இந்த நிதியாண்டின் முதல் நாள் வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவடைந்தது. இருந்தபோதிலும் தகவல் தொழில்நுட்பம், ஃஎப்எம்சிஜி மற்றும் உலோகப்பங்குகளின் சரிவு லாபத்தை கட்டுப்படுத்தியது. நிலையில்லாமல் பயணித்த இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 58,793 முதல் 59,204 புள்ளிகளுக்குள் ஊசலாடியது.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 114.92 புள்ளிகள் உயர்வடைந்து 59,106.44 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 38.30 புள்ளிகள் உயர்வடைந்து 17,398.05 ஆக இருந்தது.
» இந்தியாவில் மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை 7.8% ஆக அதிகரிப்பு: கடந்த 3 மாதங்களில் இல்லாத சரிவு
தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை மாருதி சுசூகி, பஜாஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்டஸ்இன்ட் பேங்க், எம் அண்ட் எம், டைட்டன் கம்பெனி, டாடா மோட்டார்ஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஐடிசி, இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.