மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்தில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 346 புள்ளிகள் (0.60 சதவீதம்) உயர்ந்து 57,960 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 129 புள்ளிகள் (0.76 சதவீதம்) உயர்வடைந்து 17,080 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:20 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 186.67 புள்ளிகள் உயர்வடைந்து 57,800.39 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 57.40 புள்ளிகள் உயர்வடைந்து 17,009.10 ஆக இருந்தது.
மார்ச் மாதத்திற்கான எஃப் அண்ட் ஓ பங்குகள் இன்றுடன் காலாவதியாவதால் வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடனேயே நிலையில்லாமல் பயணித்தது. இருந்தபோதிலும், உலோகம், ஆட்டோ, நிதிப்பங்குகளின் வாங்குதல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்தில் நிறைவடைந்தன.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 346.37 புள்ளிகள் உயர்வடைந்து 57,960.09 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 129 புள்ளிகள் உயர்வடைந்து 17,080.70 ஆக இருந்தது.
» கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் பூத்துக் குலுங்கும் காபி செடிகள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எம் அண்ட் எம், கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் உயர்வில் இருந்தன. பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்டஸ், ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.