வாகன உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை பிடிக்க முடியும் - அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய தொழிலக கூட்டமைப்பு(சிஐஐ) டெல்லியில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று பேசியதாவது: பொது போக்குவரத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும்.

எதிர்காலத்தில் மின்சார பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படும். ஆண்டுதோறும் நாம் 1,200 டன் லித்தியத்தை இறக்குமதி செய்கிறோம். தற்போது, காஷ்மீரில் லித்தியம் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது 5.9 மில்லியன் டன் அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல்கள் தயாரிப்புக்கு லித்தியம் மிக முக்கியமானது. இதை நாம் பயன்படுத்தினால், வாகன உற்பத்தி துறையில் இந்தியா முதல் இடத்தை பிடிக்க முடியும். வாகன உற்பத்தியில் இந்தியா கடந்தாண்டு ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்துள்ளது. தற்போது இந்திய வாகன தொழிலின் மதிப்பு ரூ.7.5 லட்சம் கோடி. ஒட்டு மொத்த ஜிஎஸ்டி வருவாயில் வாகன உற்பத்தி துறையின் பங்களிப்பு மிக அதிகம்.

நமது புதுமையான அணுகுமுறையால், பின்தங்கியுள்ள பகுதிகளில் நாம் வளர்ச்சியை அதிகரித்து வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE