டப்லின்: சுமார் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய பிரபல ஐடி நிறுவனமான அக்சென்சர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. வருடாந்திர வருவாய் சார்ந்த வளர்ச்சி மற்றும் லாப கணக்கையும் அந்நிறுவனம் குறைத்துள்ளதாக தெரிகிறது. இந்த முடிவை வியாழன் அன்று எடுத்துள்ளது அந்நிறுவனம்.
இந்த எண்ணிக்கை அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் 2.5 சதவீதம் என தெரிகிறது. Non-Billable கார்ப்பரேட் பிரிவை சேர்ந்த ஊழியர்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்நிறுவனம் தற்போது ஆண்டு வருவாய் வளர்ச்சி என்பது உள்நாட்டு கரன்சி மதிப்பில் 8 முதல் 10 சதவீதம் வரை இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. முன்பு இந்த வருவாய் 8 முதல் 11 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
நடப்பு காலாண்டுக்கான வருவாய் 16.1 பில்லியன் டாலர்கள் மற்றும் 16.7 பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என எதிர்பார்ப்பதாக அக்சென்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது. சராசரியாக இந்த எண்ணிக்கை 16.64 பில்லியன் டாலர்களாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையை காரணம் காட்டி முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.