சென்செக்ஸ் 289 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 289 புள்ளிகள் (0.50 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 57,925 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 75 புள்ளிகள் (0.44 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,076 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடனே தொடங்கியது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் பயணிக்கத் தொடங்கியது. முற்பகல் 11:12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 56.67 புள்ளிகள் சரிவடைந்து 58,157.92 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 11.15 புள்ளிகள் சரிவடைந்து 17,140.75 ஆக இருந்தது.

பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அமெரிக்க பெடரல் வங்கி மீண்டுமொரு வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது, இதனால் முதலீட்டார்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம், எஃப் அண்ட ஓ பங்குகளின் வாரந்திர காலாவதி, தகவல் தொழில் நுட்ப பங்குகள் மற்றும் நிதிப் பங்குகளின் சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இரண்டு நாள் லாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று வீழ்ச்சியில் நிறைவடைந்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 289.31 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,925.28 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 75.00 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,076.90 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை நெஸ்ட்லே இந்தியா, மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், பஜாஜ் ஃபின்சர்வ், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீட்ஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE