சென்னையில் வணிகர்கள் தொழில் உரிமங்களை மார்ச் 31-க்குள் புதுப்பிக்க அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில் உரிமங்களை வணிகர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றுமாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வணிகங்களுக்கு மாநகராட்சி முனிசிபல் சட்டம் -1919-ன்கீழ் பல பிரிவுகளில் வணிக வகைப் பாட்டுக்கு ஏற்றவாறு உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு வழங்கப்படும் உரிமங்கள், ஒவ்வொரு நிதியாண்டுக்கும் வழங்கப்பட்டு, அடுத்து வரும் நிதியாண்டுக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் புதுப்பிக்கப்பட வேண்டும்.

2023-24 நிதியாண்டுக்கு புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களை வழக்கமாக ஆய்வாளர்கள் மூலம் மண்டல அலுவலகங்களில், சிறப்பு முகாம்களிலும் புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் www.chennaicorporation.gov.in என்ற இணையதளம், கியூஆர் கோடு மூலமாகவும் உரிமங்களை தாமாகவே புதுப்பித்துக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, வணிகர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். புதிதாக தொழில் வணிகம் தொடங்குவோர் உரிமங்களை விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும். தொழில் உரிமங்களை புதுப்பிக்கத் தவறியவர்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் உரிமம் இல்லாதவர்கள் என கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE