சென்னை: இந்திய நிறுவனமாகிய இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ், நெதர்லாந்தில் சோலிஸ் டிராக்டர்ஸ் அண்ட் அக்ரிகல்சர் மெஷினரி என்ற பெயரில் துணை நிறுவனம் ஒன்றைக் கொண்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஐரோப்பிய சந்தையில் தனது செயல்பாட்டை விரிவாக்கும் நோக்கில், சோலிஸ் டிராக்டர்ஸ் நிறுவனம் ஜெர்மனைச் சேர்ந்த தாலர் ஜிஎம்பிஎச் நிறுவனத்தை ரூ.200 கோடிக்கு வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் குறித்து இண்டர்நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் மிட்டல் கூறுகையில், “தாலர், ஐரோப்பாவில் நன்கு அறியப்பட்ட நிறுவனம் ஆகும். அது அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் பெயர்பெற்ற நிறுவனம் ஆகும். இந்நிலையில் அந்நிறுவனத்தை வாங்குவதன் வழியாக ஐரோப்பாவில் எங்கள் சந்தையை விரிவாக்குகிறோம். இந்த கையகப்படுத்துதல், 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் எங்களின் தொழில்வாய்ப்புகளை வலுப்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.