‘லித்தியம்’ சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்க கூடாது: தமிழ்நாடு சூரியஒளி மின் உற்பத்தியாளர்கள் கோரிக்கை 

By செய்திப்பிரிவு

கோவை: ஜம்மு, காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘லித்தியம்’ சுரங்கத்துக்கான ஏல ஒதுக்கீட்டை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்க கூடாது என புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எலக்ட்ரிக் சைக்கிள், எலக்ட்ரிக் வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய மூலப்பொருளாக லித்தியம் அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படு கின்றன. இதுவரை சீனாவிடம் இருந்து தான் இவற்றை இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் பெற்று வருகின்றன.

இந்தியாவில் ஜம்மு, காஷ்மீர் பகுதிகளில் சமீபத்தில் ‘லித்தியம்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய உறுதுணையாக லித்தியம் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், லித்தியம் சுரங்க பணி ஆணை ஏல ஒதுக்கீட்டை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்க கூடாது என்றும், அரசு நிறுவனங்களே இப்பணியை மேற்கொள்ள வேண்டும் எனவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு சூரியஒளி ஆற்றல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி மொபைல்போன், ஏசி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் லித்தியம் அயன் பேட்டரிகள் முக்கிய பங்களித்து வருகின்றன.

மின்சாரம் இல்லாமல் பல்வேறு கருவிகளை இயக்குவதற்கு இவை பயன்படுகின்றன. இதனால் உலகளவில் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இன்று வரை ‘சீனா’ தான் சந்தையில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் ஜம்மு, காஷ்மீர் பகுதிகளில் சமீபத்தில் பெருமளவு லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை வெட்டி எடுக்கும் பணிகளுக்கான ஏலத்தை தனியார் நிறுவனங்களுக்கு விட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதை தவிர்த்து சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட அரசு நிறுவனங்களான கோல் இந்தியா, என்எம்டிசி(நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன்) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பணியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும் லித்தியம் அயன் பேட்டரி தயாரிப்பதற்கான பணிஆணைகளை 50 சதவீதம் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். லித்தியம் இந்தியாவுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பொக்கிஷம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- இல.ராஜகோபால்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE