முன்னறிவிப்பின்றி விரலில் களிம்பு தடவியதால் அபராதம் செலுத்திய ஜடேஜா: டூடுல் வெளியிட்ட அமுல்!

By செய்திப்பிரிவு

சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நடுவரிடம் தெரிவிக்காமல் களத்தில் பந்து வீசியபோது தனது விரலில் களிம்பு தடவி இருந்தார் இந்திய வீரர் ஜடேஜா. அதற்காக அவருக்கு போட்டிக்கான கட்டணத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், அதை மையமாக வைத்து டூடுல் வெளியிட்டுள்ளது அமுல் நிறுவனம்.

இந்தியாவின் முன்னணி உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனம். நடப்பு நிகழ்வுகளை வைத்து கார்டூன் வரைந்து விளம்பரமாக வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது அமுல். அந்த வகையில் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை சுட்டிக்காட்டும் வகையில் தற்போது டூடுல் வெளியிட்டுள்ளது.

ஜடேஜா பந்து வீசுவதற்கு முன்பு களிம்பை தன் விரல்களில் தடவி இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிர்ந்து கேள்வி எழுப்பப்பட்டது. தொடர்ந்து அன்றைய தினமே கேப்டன் ரோகித் மற்றும் ஜடேஜா என இருவரும் தாங்களாக முன்வந்து போட்டியின் நடுவரிடம் விளக்கம் கொடுத்தனர். பிசிசிஐ தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு போட்டிக்கான கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்தது ஐசிசி. இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை அவர்தான் வென்றிருந்தார்.

இந்தச் சூழலில் களத்தில் ஜடேஜா பந்து வீசுவது போலவும், அவருக்கு அருகில் அமுலின் டிரேட்மார்க் சின்னமான அமுல் பேபி நிற்பது போன்றும் இந்த டூடுல் வெளியிடப்பட்டுள்ளது. வேண்டுமானால் விரல்களில் வெண்ணெய் தடவிக் கொள்ளுங்கள் என ஜடேஜாவிடம் சொல்கிறது அமுல் பேபி. இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE