புதுடெல்லி: இந்தியாவின் வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்களுக்கும் பட்ஜெட்டில் கவனம் கொடுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் தொடர்பாக மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: ''கரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்தித்தது. அது மைனஸ் 23 வரை கீழ் இறங்கியது. முதலீட்டுக்கான செலவை அதிகரிக்கும் நுட்பத்தின் மூலம் பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு வந்திருக்கிறோம். அரசின் மிக கடினமான முயற்சியின் காரணமாகவே பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது.
இந்த பட்ஜெட் குறித்து எளிமையாகக் கூற வேண்டுமானால், இது இந்தியாவின் வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்களுக்கும் கவனம் கொடுத்திருக்கும் பட்ஜெட். இதன்மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு எத்தகைய நிதி சமநிலை தேவையோ அதை நாங்கள் செய்திருக்கிறோம். இப்படி ஒரு சமநிலையை செய்வது மிகவும் கடினமானது'' என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.