எல்ஐசி நிறுவனத்தின் புதிய மாற்றியமைக்கப்பட்ட ஜீவன் சாந்தி பாலிசி அறிமுகம்

By செய்திப்பிரிவு

சென்னை: எல்ஐசி நிறுவனம் கடந்த ஜன.5-ம் தேதி முதல், புதிய ஜீவன் சாந்தி பாலிசியில் வருடாந்திர பென்ஷன் விகிதங்களை உயர்த்தியுள்ளது. அதிக கொள்முதல் விலைக்கான ஊக்கத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒத்திவைப்பு காலத்தின் அடிப்படையில் கொள்முதல் விலை ரூ.1000-க்கு ரூ.3 முதல் ரூ.9.75 வரையில் பென்ஷன் விகிதங்கள் உயத்தி அமைக்கப்பட்டுள்ளன.

ஒற்றை பிரீமிய திட்டமான இந்த பாலிசியில் பாலிசிதாரர் தனி நபர் மற்றும் துணைவர் அல்லது துணைவியுடன் கூடிய ஒத்திவைக்கப்பட்ட பென்ஷனை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

இந்த பாலிசி பணியில் இருப்பவர்களுக்கோ சுய தொழில் செய்பவர்களுக்கோ ஒத்தி வைக்கப்பட்ட காலத்துக்குப் பின் நிலையான பென்ஷன் வருமானத்தை அளிக்கக் கூடியது. முதலீட்டுக்காக உபரியாகப் பணம் வைத்திருப்போருக்கும் ஏற்றது. இந்த திட்டம், இளவயதினர் தனது ஓய்வுக் காலத்தைச் சிறந்த வகையில் திட்டமிட வழி வகுக்கிறது.

பாலிசியின் தொடக்கத்திலேயே வருடாந்திர பென்ஷன் விகிதங்கள் உத்தரவாதமாக அளிக்கப்படுகின்றன. ஒத்திவைக்கப்பட்ட காலத்திலிருந்து வாழ்நாள் முழுவதும் பென்ஷன் அளிக்கப்படும்.

இந்த புதிய ஜீவன் சாந்தி திட்டத்தின் வருடாந்திர பென்ஷன் தொகையை எல்ஐசியின் இணையதளம் மற்றும் பல்வேறு எல்ஐசி செயலிகளில் உள்ள கால்குலேட்டர் மூலம் கணக்கிடலாம். மேலும் விவரங்களுக்கு www.licindia.in இணையதளத்தைப் பார்க்கலாம்.

இவ்வாறு எல்ஐசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE