புவனேஷ்வர்: எதிர்வரும் 2024-ல் இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை தொடங்கும் என மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதனை ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தனியார் டெலிகாம் 5ஜி தொடக்க நிகழ்வில் பங்கேற்ற போது அவர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று 5ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் துவங்கும் என அவர் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அது 2024-ல் சாத்தியம் என சொல்லியுள்ளார். இந்தியாவில் டெலிகாம் சேவையை வழங்கி வரும் அரசு நிறுவனம்தான் பிஎஸ்என்எல்.
“2024-ல் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை தொடங்கும்” என தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் 5ஜி சேவையை துவக்கி வைத்த போது இதனை அவர் தெரிவித்திருந்தார். இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. படிப்படியாக பல்வேறு மாநிலங்களில் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் இந்நிகழ்வில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு டெலிகாம் துறை சார்ந்து மேற்கொண்டுள்ள முதலீடுகள் குறித்தும் அவர் பேசி இருந்தார். அப்போது அவருடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனிருந்தார்.