புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்து வருகிறது. அந்த வகையில், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு பாக்கியானது ஜூன் 2022 நிலவரப்படி ரூ.17,176 கோடியாக உள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. அப்போது, அரசியலமைப்பு விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க மத்திய அரசு உறுதிபூண்டது. இந்த நிலையில், இதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.