புதுடெல்லி: ஐடிசி நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சஞ்சிவ் புரி நேற்று கூறியது: உலகளவில் இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில்தான் பணவீக்க விகிதம் குறைவாக உள்ளது. அண்மைக் காலமாக நுகர் பொருட்கள் துறையில் பணவீக்கத்தின் தாக்கம் தணிந்து வருகிறது. இதையடுத்து, கிராமப்புறங்களில் நுகர்பொருட்கள் விற்பனை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உள்நாட்டில் செயல்பட்டு வரும் ஐடிசி போன்ற நிறுவனங்களுக்கு மூலதனம் மிக முக்கியமானதாகும். அதனை பெறுவதற்கான நடவடிக்கைகளை ஏற்கெனவே முடுக்கிவிட்டுள்ளோம்.
உள்கட்டமைப்பு முதலீடு போன்ற அரசின் பலகொள்கை முடிவுகள் பொருளாதாரத்தை சரியான திசையில் நகர்த்தி வருகின்றன. சுற்றுலா, விவசாயம், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தி நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அது நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதாக இருக்கும் என்றார்.