ரெப்போ விகிதம் 6.25% ஆக உயர்வு: வங்கிக் கடன் மீதான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் என உயர்த்தியுள்ளது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமாகும். ஒட்டுமொத்தமாக அந்தக் கடனுக்கான விகிதம் தற்போது 6.25 சதவீதத்தை எட்டியுள்ளது.

இந்த ரெப்போ விகித உயர்வு காரணமாக வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. அதனால் வீடு, வாகனம், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வை முன்னெடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மதிப்பீட்டின் அடிப்படையில் நிதிக் கொள்கை கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் வாக்கில் ரெப்போ விகிதத்தை 0.50 அடிப்படை புள்ளிகள் அளவில் ரிசர்வ் வங்கி உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்னர் நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 0.50 சதவீதம், ஜூன் மாதத்தில் 0.50 சதவீதம், மே மாத வாக்கில் 0.40 சதவீதம் என அடிப்படை புள்ளிகளை உயர்த்தி இருந்தது ரிசர்வ் வங்கி. அதனால் மே மாதம் 4.40 சதவீதமாக இருந்த இந்த வட்டி விகிதம் இப்போது 6.25 சதவீதத்தை எட்டியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE