புதுடெல்லி: ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், உலக அளவில் பணவீக்கம் அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கியது. விளைவாக, அந்நியச் செலாவணி இருப்பு குறையத் தொடங்கியது.
இந்நிலையில், சுழற்சி அடிப்படையிலான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவிடம் அந்நியச் செலாவணி இருப்பு போதுமான அளவில் உள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த மதிப்பீட்டு நிறுவனமான எஸ்&பி குளோபல் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவிடம் 570 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பாக உள்ளது. இவ்வாண்டு இறுதியில் அது 600 பில்லியன் டாலராக உயரும் என்றும் நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.3% ஆக இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மீண்டும் ரெப்போ விகிதத்தை உயர்த்தும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது