75,000 புதிய தொழில்களை அங்கீகரித்து சாதனை: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இதுவரை 75 ஆயிரம் புதிய தொழில்கள் அங்கீகரிக்கப்பட்டு இந்தியா ஒரு புதிய மைல்கல்லை எட்டி சாதனைப் படைத்துள்ளதாக பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொதுவிநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியது: தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை, இதுவரை 75,000-க்கும் மேற்பட்ட புதிய தொழில் நிறுவனங்களை அங்கீகரித்துள்ளன. இது சுதந்திரத்தின் 75-வது ஆண்டுடன் இணைந்த ஒரு மைல்கல். இந்தியா சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை கொண்டாடும் தருணத்தில், இந்த புதிய தொழில் நிறுவனங்கள், புதுமை, வளர்ச்சி, உத்வேகத்தை தூண்டுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, செங்கோட்டையிலிருந்து சுதந்திரதின உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் புதிய தொழில் முனைவோர்களை பயன்படுத்தி, புதிய இந்தியாவை உருவாக்க கனவு கண்டார். தற்போது, புதிய தொழில் நிறுவனங்களுக்கான தேசிய தினமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜனவரி 16-ம் தேதி, நாட்டில் புதுமையான புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கான ஒரு செயல் திட்டம் உருவாக்கப்பட்டது.

அடுத்த 6 ஆண்டுகளில், புதிய தொழில் நிறுவனங்களின் 3-வது பெரிய நாடாக இந்தியா உருவாக இந்த செயல்திட்டம் வழிகாட்டியுள்ளது. ஆரம்பக்கட்டத்தில், பத்தாயிரம் புதிய தொழில்நிறுவனங்கள் 808 நாட்களில் அங்கீகரிக்கப்பட்டாலும், தற்போது, பத்தாயிரம் புதிய தொழில் நிறுவனங்கள் 156 நாட்களிலேயே அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு 80-க்கும் மேற்பட்ட புதிய தொழில்நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுவதால், அவற்றின் எதிர்காலம் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிப்பதாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE