ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து சாதனை: ஜூன் மாதத்தில் ரூ.1,44,616 கோடி; தமிழகத்தில் 83% உயர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,44,616 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இது 56% அதிகமாகும்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

2022 ஜூன் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,44,616 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,306 கோடி மாநில ஜிஎஸ்டி ரூ.32,406 கோடி, ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.75,887 கோடி (பொருள்கள் இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.40,102 கோடி உட்பட), செஸ் வரி ரூ.11,018 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.1,197 கோடி உட்பட). 2022 ஏப்ரல் மாதத்தின் வசூல் ரூ.1,67,540 கோடிக்கு அடுத்தபடியாக 2022 ஜூன் மாதத்தில் 2-வது அதிகபட்ச ஜிஎஸ்டி மொத்த வசூல் ஆகியுள்ளது.

கடந்த ஆண்டு இதேமாதத்தில் ரூ.92,800 கோடி என்று இருந்த நிலையில், 2022 ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 56% அதிகமாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தில் உள்நாட்டு பரிவர்த்தனைகளிலிருந்து (சேவைகளின் இறக்குமதி உட்பட) ஈட்டப்பட்ட வருவாய் 56% அதிகமாகும். பொருள்களின் இறக்குமதியிலிருந்து இம்மாதத்தின் வருவாய் 55% அதிகமாகும்.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து 5-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடி என்ற அளவைக் கடந்து மாதாந்திர ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சராசரி மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.10 லட்சம் கோடி என்பதற்கு மாறாக நிதியாண்டு 2022-23-ன் முதல் காலாண்டில் சராசரி மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.51 லட்சமாக இருந்தது. இது 37% அதிகரிப்பை காட்டுகிறது.

புதுச்சேரியில் 2021 ஜூன் மாதத்தில் ரூ.104 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், 75% அதிகரித்து 2022 ஜூன் மாதத்தில் (பொருள்களின் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரி உட்படுத்தப்படாமல்) ரூ.182 கோடியாக இருந்தது.

தமிழ்நாட்டில் 2021 ஜூன் மாதத்தில் ரூ.4,380 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், 83% அதிகரித்து 2022 ஜூன் மாதத்தில் (பொருள்களின் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரி உட்படுத்தப்படாமல்) ரூ.8,027 கோடியாக இருந்தது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE