இந்திய சாலைகளில் கம்பேக் கொடுக்கும் அம்பாஸடர் கார்? - EV மாடலில் உற்பத்திக்கு திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய சாலைகளில் மீண்டும் கம்பீரமாக இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அம்பாஸடர் கார் கம்பேக் கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முழுவதும் மின்சார சக்தியில் இயங்கும் வகையில் இந்த மாடல் கார் உற்பத்தியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1956 முதல் இந்திய சாலைகளில் றெக்கை கட்டி பறந்த கொண்டிருந்தது அம்பாஸடர் கார். இந்திய நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கார் என்பதால் இதற்கு தனி மவுசு. அப்போதைய இந்திய சாலைகளில் சுகமாக பயணிக்க இந்த கார் உதவியது. சாமானிய மக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலரும் பயணிக்கின்ற காராக இருந்தது. முக்கிய அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் இந்த காரில்தான் பயணித்து வந்தனர். அந்த அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களை கொண்ட கார் இது.

கால ஓட்டத்தில் சந்தையில் மற்ற நிறுவனங்கள் உடனான போட்டி காரணமாக மெல்ல தனது மவுசை இழந்தது அம்பாஸடர். ஒரு கட்டத்தில் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தியது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தான் அம்பாஸடர் கார்களை உற்பத்தி செய்து வந்தது. இந்நிலையில், மின்சார வாகன மாடலில் அம்பாஸடர் கார் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரெஞ்சு நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான பியூகாட் (Peugot) உடன் இணைந்து புதிய டிசைனில் அம்பாஸடர் கார்கள் வெளிவர உள்ளதாக தெரிகிறது. இந்த கார்கள் சென்னையில் உள்ள உற்பத்திக் கூடத்தில் இருந்து தயாராகும் எனத் தெரிகிறது. இதற்கான ஒப்பந்தமும் இரு நிறுவனங்கள் இடையிலே கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE