புதுடெல்லி: வாடகை கார் நிறுவனங்களான ஓலா, உபேர் ஆகியவை நுகர்வோர் விதி மீறல், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டது தொடர்பாக இரண்டு நிறுவனங்களுக்கும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஓராண்டுகளில் இரு நிறுவனங்கள் மீதும் 3,200-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவான நிலையில், அவை தொடர்பான நடவடிக்கையில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தீவிரம் காட்டியுள்ளது.
அதிகக் கட்டணம் வசூலித்தல், சேவைகள் வழங்குவதில் குறைபாடு, உரிய காரணமின்றி பயணத்தை ரத்து செய்வது, கட்டண உயர்வு, ஆன்லைனில் செலுத்தாமல் பணமாக கட்டணத்தை தர வலியுறுத்துவது, குறைவான கட்டணத்துக்கும் அதிக கட்டணம் வசூலிப்பது, ஓட்டுநர்களின் நடத்தை மீறல்கள், வாகனங்களில் ஏசி போட மறுப்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் இந்த இரண்டு நிறுவனங்கள் மீதும் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக பதில் அளிக்கும்படி ஓலா, உபேர் நிறுவனங்களை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஏப் 1-ம் தேதி முதல் 2022 மே 1-ம் வரை ஓலாவுக்கு எதிராக 2,482 புகார்களும், உபேருக்கு எதிராக 770 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.