வைப்பு நிதி மீது வழங்கப்படும் கடன்கள் குறித்து தெளிவுபடுத்துகிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளருமான 'குறள் இனிது' சோம.வீரப்பன்.
வைப்புத்தொகை மீது கடன் (Deposit Loan): "எதிர்காலத் தேவைக்காக குறிப்பிட்ட ஒரு தொகையை வங்கியில் குறிப்பிட்ட காலத்திற்கு நிரந்தரமாக டெபாசிட் செய்திருப்பதற்கு நிரந்தர வைப்புத் தொகை என்று பெயர். இந்த வைப்புத் தொகைகளுக்கென்று முதிர்வு காலங்கள் உண்டு. அதுவரையில் அதனைத் திருப்பி எடுக்க முடியாது. இந்த நிலையில், இடையிலேயே வாடிக்கையாளர்களுக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகிறது. ஆனால் வங்கியில் இருக்கும் பணத்தை எடுக்கவும் முடியாது. அப்போது என்ன செய்யலாம் என்று வாடிக்கையாளர்கள் குழம்பிப் போகலாம். அப்படிபட்ட சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்று வங்கி அவர்களுக்கு வழிகாட்டுகிறது. அதாவது குறிப்பிட்ட அவசரத் தேவையை சரி செய்துகொள்ள வாடிக்கையாளர்கள் அவர்களின் வைப்புத் தொகையின் மீது கடன் பெற்றுக் கொள்ள வங்கி வகை செய்கிறது.
முன்தேதியிட்ட முதிர்வு: நிரந்தர வைப்புத் தொகையைப் பொறுத்த வரையில் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் ஒருவர் ஜனவரி மாதம் ஒரு குறிப்பிட்டத் தொகையை 3 வருடங்களுக்கு நிரந்த வைப்பு தொகையாக வங்கியில் போட்டிருக்கிறார். ஆனால், ஏப்ரல் மாதத்தில் அவருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றால், அவர் வங்கியை அணுகி, முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை திருப்பித் தருமாறு கேட்கலாம். அப்படிக் கேட்கும்போது எத்தனை மாதம் பணம் வங்கியில் இருந்ததோ அந்த மாதங்களுக்கு வட்டி கணக்கிட்டு அதில் 1 சதவீதத்தை குறைத்துக் கொண்டு மீதித் தொகையை வாடிக்கையாளரிடம் வங்கிக் கொடுத்து விடும்.
இரண்டு வகை வைப்பு நிதிக் கடன்: மாறாக, வாடிக்கையாளருக்கு குறுகிய காலத்திற்கு மட்டுமே அவசரமாக பணம் தேவைப்படுகிறதென்றால், அவர் வைப்புத் தொகை மீது கடன் பெற்றுக்கொள்ளலாம். வைப்புத்தொகை மீதானக் கடன் இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறன. ஒன்று, வாடிக்கையாளரின் பெயரில் இருக்கும் சொந்த வைப்புத்தொகை மீது வழங்கப்படும் கடன். அதாவது, வாடிக்கையாளரின் பெயரிலோ, கூட்டாகவோ, மைனரின் பெயரில் வைத்திருக்கும் வைப்புத் தொகைகள் மீது கடன் வழப்படும்.
» 424 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது வேதாந்து நிறுவனம் - பின்புலம் என்ன?
» டெர்ம் இன்சூரன்ஸ் ஏன் முக்கியம்: கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன?
மற்றொன்று நண்பர்கள், உறவினர்கள் என மூன்றாவது நபர்கள் வைத்திருக்கும் வைப்புத் தொகையின் மீதும் வங்கி கடன் வழங்கும். சொந்த வைப்புத் தொகையின் மீது கடன் வாங்கும்போது வைப்புத் தொகை மீதான வங்கி வட்டியில் இருந்து 1 சதவீதம் அதிகமாக வட்டி வசூலிக்கப்படும். மூன்றாவது நபர் வைப்புத் தொகை மீது வங்கிக்கடன் வழங்கும் போது வட்டி 2 சதவீதம் அதிகம். அதேநேரத்தில் வட்டி ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட் எனப்படும் ஆர்எல்எல்ஆர்-க்கு இணையாக இருக்க வேண்டும். உதாரணமாக, மூன்றாம் நபர் வைப்புத் தொகைக்கு வட்டி 5 சதவீதம் என்றால், அதிலிருந்து இரண்டு சதவீதம் சேர்த்து 7 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். அதே நேரத்தில் ரெப்போ வட்டி 7.5 சதவீதமாக இருந்தால் கடன் தொகைக்கான வட்டி 7.5 சதவீதமாக நிர்ணயிக்கப்படும்.
எவ்வளவுக் கடன் வழங்கப்படும்? - வைப்புத் தொகை, அதன் மீது கடன் வாங்கும் காலம் வரையில் எவ்வளவு வட்டி வந்திருக்கிறதோ அந்தத் தொகையையும் இரண்டையும் சேர்த்து உள்ள தொகையின் மீது கடன் வழங்கப்படும். இந்த வகைக் கடன்களில் மார்ஜின், வைப்புத் தொகை முதிர்வடையும் காலத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். வைப்புத் தொகை முதிர்வு அடைய நீண்ட காலம் இருக்கிறது என்றால், மார்ஜின் அதிமாக இருக்கும். சொந்த வைப்பு தொகை மீது குறைந்தது 5 சதவீதம், அதிகபட்சம் 20 சதவீதமும், மூன்றாவது நபர் வைப்பு தொகை மீது குறைந்த பட்சம் 25 சதவீதம் மார்ஜின் நிர்ணயம் செய்யப்படும். இந்த மார்ஜின் கணக்கிடும்போது நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியில் உள்ள டிடிஎஸ் தொகையை கழித்து விடுவார்கள். கடன் வழங்குவதற்கு நிரந்தர வைப்புத் தொகைக்கான உண்மை ஆவணத்தை வங்கி கேட்கும். அதனை லீனாக குறித்துக் கொண்ட பின்னர் கடன் ஒப்புதல் வழங்குவார்கள்.
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்