தங்கம் விலை கடும் உயர்வு: இன்றைய நிலவரம் என்ன? 

By செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் பவுன் 40 ஆயிரத்தை நோக்கி நகர்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.

எனினும் சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை குறைந்திருந்த நிலையில் விலை தற்போது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. பவுன் 40 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 உயர்ந்து ரூ.4919-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.39352-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42544-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.71.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.71,500 ஆக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE