சிறு வணிகத்தை பாதுகாக்க திறந்தவெளி கட்டமைப்பு மின்னணு வர்த்தகம் உதவும்: பியூஷ் கோயல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மின்னணு வர்த்தகத்தை ஜனநாயகப்படுத்தி சிறு வணிகத்தை பாதுகாப்பதற்கு திறந்தவெளி கட்டமைப்பு மின்னணு வர்த்தகம், உதவும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் ஏற்பாடு செய்திருந்த 5-ஆவது வருடாந்திர தொழில் முனைவோர் மாநாட்டில் காணொலிக் காட்சி வாயிலாக அவர் உரையாற்றினார். அப்போது கூறியதாவது:

பிலானி, பிட்ஸ் கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான நானாஜி தேஷ்முக்கிற்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவருடைய வாழ்க்கை மற்றும் பணிகள் நாட்டிற்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.

பிட்ஸ் கல்வி நிறுவனம், புதிய கண்டுபிடிப்பாளர்களையும், இடர்பாடுகளை எதிர்கொள்பவர்களையும் உருவாக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த நிறுவனத்தில் பயின்றவர்கள் சினிமா, எழுத்து, வர்த்தகம் மற்றும் சமூக சேவைத் துறைகளில் வெற்றிகரமாக பணியாற்றி உள்ளனர்.

மின்னணு வர்த்தகத்தை ஜனநாயகப்படுத்தி சிறு வணிகத்தை பாதுகாப்பதற்கு திறந்தவெளி கட்டமைப்பு மின்னணு வர்த்தகம், உதவும்.

நாட்டின் புதிய கண்டுபிடிப்பு இயந்திரமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திகழ்கிறன. உலகில் நாம் மூன்றாவது மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களைக் கொண்ட நாடாக இருக்கிறோம்.

தோல்விகளைக் கண்டு அச்சமடையக்கூடாது என்று தொழில் முனைவோர்களை கேட்டுக் கொள்கிறேன். புதிய கண்டுபிடிப்புகள், சிந்தனைகள், துணிச்சலுடன் இருத்தல் ஆகியவற்றை கைவிடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE