ஆசியாவின் முதலாவது பணக்காரர் முகேஷ் அம்பானி: சொத்து மதிப்பு 10,300 கோடி டாலர்

By செய்திப்பிரிவு

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 10,300 கோடி டாலராகும். கோடீஸ்வரர்கள் பட்டியலில் நைகா நிறுவனர் பல்குனி நாயர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்.

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 8,100 கோடி டாலராகும்.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஓராண்டில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. அதானியின் சொத்து மதிப்பு ஓராண்டில் 4,900 கோடி டாலர் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் வாரத்துக்கு ரூ. 6000 கோடி என்ற அளவில் இவரது சொத்து மதிப்பு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

``ஹருன் குளோபல் ரிச் லிஸ்ட்'’ என்ற தலைப்பில் மொத்தம் 3,381 கோடீஸ்வரர்களை பட்டியலிட்டுள்ளது. 69 நாடுகளில் 2,557 நிறுவனங்களைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் உள்ள கோடீஸ்வர்களில் 2,071 பேரது சொத்து மதிப்பு ஓராண்டில் அதிகரித்துள்ளது. 942 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு சரிவடைந்துள்ளது. 490 கோடீஸ்வரர்கள் புதிதாக இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள கோடீஸ்வரர்களில் 258 பேர் இந்தியாவில் உள்ளனர். இதில் 58 பேர் புதிதாக சேர்ந்தவர்களாவர்.

உலக அளவில் அதிக கோடீஸ்வரர்களை உருவாக்கும் நாடுகள் வரிசையில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது.

சீனாவில் 1,133 கோடீஸ்வரர்கள் உள்ளனர். இது இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை விட (215) ஐந்து மடங்கு அதிகமாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய கோடீஸ்வரர்களின் ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு 70,000 கோடி டாலர் அதிகரித்துள்ளது. இந்த தொகையானது ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜிடிபி-யை விட இரு மடங்கு அதிகமாகும்.

மும்பையில் 72 கோடீஸ்வரர்களும், டெல்லியில் 51 கோடீஸ்வரர்களும், பெங்களூருவில் 28 கோடீஸ்வரர்களும் உள்ளனர்.

உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 18 சதவீதம். உலக கோடீஸ்வரர்களில் இந்தியாவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8 சதவீதமாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 50 சதவீதம் அதிகமாகும். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 34. இவர்கள் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் வசிக்கின்றனர்.

உலகிலேயே அதிக அளவில் கோடீஸ்வரர்கள் உருவாகும் நகரங்களில் மும்பை, டெல்லி இடம்பெற்றுள்ளது.

கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் 59 சதவீதம் பேர் முதல் தலைமுறை கோடீஸ்வரர்களாவர். இவர்கள் சொந்தமாக தொழில் தொடங்கி முன்னேறிய தொழில் முனைவோராவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE