ஏர் இந்தியாவின் புதிய தலைவராக  டாடா சன்ஸ் சந்திரசேகரன் நியமனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஏர் இந்தியாவின் புதிய தலைவராக சந்திரசேகரனை நியமித்து டாடா குழுமம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்தது. அதன் பிறகு ஏலத்தில் அதிக தொகை கேட்டதால் டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் ஏர் இந்தியா நிறுவனத்திடம் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்களை டாடா குழுமத்திடம் கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு முறைப்படி ஒப்படைத்தது. இதன் தொடர்ச்சியாக ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி, நிர்வாக இயக்குநராக இல்கர் ஐசி நியமனம் செய்யப்படுவதாக டாடா அறிவித்தது.

துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றியவர் இல்கர் ஐசி. ஏப்ரல் 1-ம் தேதி இல்கர் ஐசி பொறுப்பேற்க இருந்தார். அவரது நியமனத்துக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளப்பின. துருக்கி அதிபருக்கு நெருக்கமானவர் என்பதால் அவரது பணி நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கக்கூடாது என இந்தியாவில் கோரிக்கை எழுந்தது.

இல்கர் ஐசி

இதனையடுத்து அவர் பதவியேற்க மறுத்து விட்டார். இந்தநிலையில் ஏர் இந்தியாவின் புதிய தலைவராக சந்திரசேகரன் இருப்பார் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது. இதற்கான ஒப்புதலை டாடா குழுமம் இன்று வழங்கியுள்ளது.

சந்திரசேகரன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர், ஹோல்டிங் நிறுவனம் மற்றும் 100க்கும் மேற்பட்ட டாடா இயக்க கம்பெனிகளை வழி நடத்தி வருகிறார். அக்டோபர் 2016 இல் டாடா சன்ஸ் வாரியத்தில் அவர் சேர்ந்தார். ஜனவரி 2017 அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்

டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர் மற்றும் டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உட்பட பல்வேறு டாடா குழும நிறுவனங்களின் வாரிய தலைவராகவும் உள்ளார். 2009-17 வரை அவர் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

டிசிஎஸ் நிறுவனத்தில் 30 ஆண்டுகள் பணியாற்றிய அவர் தொடர்ந்து தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக ஆனார்.

சந்திரசேகரன் டாடா குழுமத்திற்கு தலைமை தாங்கும் முதல் பார்சி அல்லாத தொழில்முறை நிர்வாகி ஆவார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE