புதுடெல்லி: இந்தியாவின் சேவைத் துறை வளர்ச்சி டிசம்பர் மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. அதேசமயம் விற்பனை அதிகரித்துள்ளது. கரோனா பரவல் புதிய அலை குறித்த அச்சம் காரணமாக ஜனவரிமாதத்தில் வளர்ச்சி மேலும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியாவின் சேவைத்துறை வர்த்தக நடவடிக்கை குறியீட்டெண் நவம்பர் மாதத்தில் 58.1 புள்ளியாக இருந்தது. இது டிசம்பர் மாதத்தில் 55.5 புள்ளிகளாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் சேவைத் துறை கடும் பாதிப்பை சந்தித்தது. இதனால் நுகர்வோர் மேலாண் குறியீட்டெண் (பிஎம்ஐ) 50 புள்ளிகளுக்கும் கீழ் இருந்தது.
இருப்பினும் கடந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சராசரி வளர்ச்சி விகிதம் ஸ்திரமாக இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் புதிய வைரஸ் பரவல் காரணமாக உள்நாட்டில் சேவைத்துறை சார்ந்த நடவடிக்கைகள் பாதிக்கப்படும். அதேபோல வெளிநாட்டு பயணிகள் வரத்தும் குறையலாம். இதனால் சுற்றுலா சார்ந்த சேவைத்துறை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல டிசம்பரில் புதியவேலை வாய்ப்புகள் சேவைத்துறையில் குறைந்துள்ளன. தற்போதைய சூழலில் இருக்கும் பணியாளர்களை வைத்து நிலைமையை சமாளிக்க பெரும்பாலான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதால், புதிய வேலை வாய்ப்புக்கான சூழல் குறைந்துள்ளது.
- பிடிஐ