வேளாண் மசோதாக்கள்; வரலாற்றுச் சிறப்புமிக்கது: பியூஷ் கோயல் பெருமிதம்

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட வேளாண் சீர்திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்று வர்த்தகம், தொழில்கள் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வர்ணித்துள்ளார்.

தெலங்கானா தொழில் மற்றும் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்த 'புதிய உலகத்தின் முறை: தற்சார்பு இந்தியா' என்ற நிகழ்ச்சியில் இன்று பேசிய அவர், "இந்திய விவசாயத் துறையின் வரலாற்றை இந்த சீர்திருத்தங்கள் மாற்றி அமைக்கும்," என்று தெரிவித்தார்.

இதன் மூலம் விவசாயிகளின் உற்பத்தி திறனும், வருவாயும் உயரும். விவசாயத் துறை எதிர்கொண்டிருந்த தடைகளை தகர்த்தெரிந்து விட்ட காரணத்தாலும், தனியார் துறை அதிக அளவில் பங்குபெறும் வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாலும், விவசாயிகளுக்கான புதிய பாதையை இது வகுக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

தற்சார்பு இந்தியா இயக்கத்தைப் பற்றி பேசிய அவர், இதன் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து நவீன தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குள் வரும் என்று கூறினார். தரமான பொருட்களை நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் இந்தியா தன்னிறைவு அடையும் என்று கோயல் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE