உணவுபொருள் விநியோக சங்கிலி அறுந்து விடும் ஆபத்து?- பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் எச்சரிக்கை

ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து போலீஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் கெடுபிடியால் உணவுப்பொருட்கள் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் என பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் தலைவர் வருண் பெர்ரி எச்சரித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாக புகார்கள் எழத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் தலைவர் வருண் பெர்ரி கூறுகையில் ‘‘ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து போலீஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் கெடுபிடியால் உணவுப்பொருட்கள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விநியோக சங்கிலி அறுந்துள்ளது.

உணவுப்பொருட்களை விநியோகிக்கும் சங்கிலி மிக முக்கியமானது. இதில் ஒரு பிரிவு தொடர்பு அறுந்தாலும் கூட மக்களுக்கு 7 முதல் 10 நாட்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு விடும். எனவே மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும்,’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE