ஆன்லைன் மூலம் பொருள்களை விற்பனை செய்யும் பிளிப்கார்ட் நிறுவனம் ஒரே நாளில் நிச்சயமாக டெலிவரி அளிக்கும் புதிய திட்டத்தை 10 நகரங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் பொருளை பிற்பகல் 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்தால், அன்றைய தினம் இரவு 9 மணிக்குள் அவர்கள் குறிப்பிடும் முகவரிக்கு டெலிவரி செய்யப்படும் என்று பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக இந்த வசதி பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, நொய்டா, குர்காவ்ன், பரீதாபாத், மனேசர், நவி மும்பை, தாணே ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. படிப்படியாக இந்த வசதி பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இத்தகைய வசதியைப் பெற கூடுதலாக ரூ. 200 செலுத்த வேண்டும். அறிமுக சலுகையாக ரூ. 140-க்கு இந்த வசதி அளிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.