அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் தலைவராக சமீபத்தில் ஜெனட் ஏலன் பொறுப்பேற்றுக்கொண்டார். தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதும் நடந்த முதல் கூட்டத்துக்கு பிறகு முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
ஏற்கெனவே கொடுத்து வரும் ஊக்க நடவடிக்கைகளில் 10 பில்லியன் டாலரை குறைக்கப் போவதாக ஜெனட் தெரிவித்தார். அடுத்த மாதத்திலிருந்து 55 பில்லியன் டாலர் ஊக்க நடவடிக் கைகள் மட்டுமே தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஃபெடரல் ரிசர்வ் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஊக்க நடவடிக்கைகளை குறைக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு 85 பில்லியன் டாலர் ஊக்க நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டு வந்து, அது படிப்படியாக குறைக்கப்பட்டு இப்போது 55 பில்லியன் டாலராக வந்திருக்கிறது.
அதே சமயத்தில் வட்டி விகிதங்களை எதிர்காலத்தில் (2015-ம் ஆண்டு) உயர்த்து வதற்கும் வாய்ப்பு இருக்கும் என்ற சூசகமான தகவலையும் அவர் தெரிவித்தார். 2008-ம் ஆண்டு முதல் அமெரிக்க வட்டி விகிதங்கள் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்ற நிலையிலே இருக்கிறது.
இந்த நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவடைந்தன. மேலும் 2014-ம் ஆண்டு அமெரிக்க பொருளாதாரம் 2.8 முதல் 3.0 சதவீத வளர்ச்சியும், 2015-ம் ஆண்டு 3.0 சதவீதம் முதல் 3.2 சதவீத வளர்ச்சியும் கொண்டதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
அதே சமயத்தில் இப்போது 6 சதவீதத்துக்கு மேல் இருக்கும் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை, 2015-ம் ஆண்டில் 5.6 முதல் 5.9 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது. மேலும் இப்போது 1.6 சதவீதமாக இருக்கும் பணவீ க்கம் அடுத்தவருடம் 2 சதவீதமாக இருக்கும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது.