தங்கம் இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடு தொடர வேண்டும் என்றே தான் விரும்புவதாக மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.
இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்தது. இதனால் தங்கம் இறக்குமதி செய்வது பெருமளவு குறைந்தது. இது தொடர்பாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது: நமது நாட்டிலேயே தங்கத்தைக் கண்டறிவதற்கான முயற்சிகள் சில எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். சமீபத்தில் அனைத்து மூடப்பட்டுள்ள சுரங்கங்களை ஏலம் விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது குறித்து கருத்து தெரிவித்த அவர், அவற்றை சுரங்கத்துறை விற்பனை செய்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இத்தகைய மூடப்பட்ட சுரங்கங்களை தங்களுக்கு அளித்தால், அதிலிருந்து தங்கம் வெட்டி எடுத்துத் தருவதாக உலகில் எவரேனும் தெரிவிக்க மாட்டார்களா என்று தனக்குத் தோன்றுவதாக சிதம்பரம் கூறினார்.
இப்போதைய சூழலில் தங்கம் மீதான கட்டுப்பாடு மிகவும் தேவையான ஒன்று என்று குறிப்பிட்டார். இருப்பினும் தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்குக் காரணம், கள்ளக்கடத்தல் வழியில் இந்தியாவுக்குள் தங்கம் வரும் என்பதுதான்.
நடப்பு நிதி ஆண்டில் தங்கத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக தங்கம் இறக்குமதி குறைந்ததில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறையும். தற்போதைய கணிப்பின்படி நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 5,000 கோடி டாலருக்கு குறைவாக இருக்கும் என்று சிதம்பரம் குறிப்பிட்டார்.
கடந்த நிதி ஆண்டில் (2012-13) நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 4.8 சதவீதமாக அதாவது 8,820 கோடி டாலர் அளவுக்கு உயர்ந்தது. இதைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் தங்கத்தின் மீது அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஜி.டி.பி பற்றாக்குறை 4.8 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்பதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக சிதம்பரம் கூறினார்.
ஜனவரி 28-ம் தேதி நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதிக் கொள்கையில் பணவீக்கத்தின் பாதிப்பு இருக்குமா? அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இருக்குமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் ஆகியவற்றின் விலையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை அரசு தீவிரமாக எடுத்து வருவதாக சிதம்பரம் கூறினார்.
பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால், மார்ச் மாதத்தில் செலவு அனுமதி கோரிக்கையை (வோட் ஆன் அக்கவுண்ட்) மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்நிலையில் புதிய வரி விதிப்புகள் குறித்து இப்போதே கூற முடியாது என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.
டீசல் மீதான மானியத்தைக் குறைக்கும் வகையில் மாதந்தோறும் லிட்டருக்கு 50 காசுகள் உயர்த்தும் நடவடிக்கையானது மிகச் சரியானதே என்று அவர் குறிப்பிட்டார். இதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தியிருந்தால், இப்போதைய அளவுக்கு இடைவெளி ஏற்பட்டிருக்காது என்று சிதம்பரம் கூறினார்.