வாட்ஸ்ஆப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலர் கொடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. இதனால் இந்தியாவில் தொழில் போட்டியை நெறிப்படுத்தும் ஆணையமான சி.சி.ஐ. பிடியில் இந்த இரு நிறுவனங்களும் சிக்கலாம் என்று தெரிகிறது. இந்த நிறுவனங்கள் இந்தியாவில் கணிசமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் இணைக்கப்படும் பட்சத்தில் அந்த இணைப்புக்கு சி.சி.ஐ. அனுமதி வாங்க வேண்டி இருக்கும். இது கட்டாய நடைமுறை ஆகும். இதுவரை இந்த இணைப்பு குறித்து எந்தவிதமான தகவலும் சி.சி.ஐ.க்கு தெரிவிக்கப்படவில்லை என்று அந்த ஆணையத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்படுத்து வோர்களின் எண்ணிக்கை 9 கோடிக்கு மேல். அதே போல வாட்ஸ் ஆப்-ஐ 4 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்துகின்றனர். அமெரிக்க தொழில் போட்டியை நெறிப்படுத்தும் ஆணையமான எஃப்.டி.சி. இந்த இணைப்புக்கு இன்னும் ஒப்புதல் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.