தங்க இறக்குமதி அதிகரிப்பு

தங்க இறக்குமதி மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் தங்க இறக்குமதி 38 டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3 டன்னாக இருந்த தங்க இறக்குமதி இப்போது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் மாதத்தில் தங்க இறக்குமதி 25 டன்னாக இருந்தது. இது அதற்கு முந்தைய மாதத்தைவிட 19 டன் அதிகமாகும். இதற்கு தவறான மதிப்பிடும் முறைதான் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.38 டன்னாக தங்க இறக்குமதி இருந்தது. அதன்பிறகு ரிசர்வ் வங்கி 80:20 என்ற திட்டத்தை கொண்டுவந்தது. இந்த திட்டத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20 சதவீதத்தை மீண்டும் ஏற்றுமதி செய்தால் மட்டுமே தங்க இறக்குமதி செய்ய முடியும் என்பதுதான் இந்தவிதி.

கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தங்க இறக்குமதி 300 டன்னை எட்டியதால், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது.

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் தங்க இறக்குமதி அதிகரித்திருப்பதால் இது குறித்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு ரிசர்வ் வங்கி கோரியுள்ளது. இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் முந்தைய ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி 80:20 என்ற அளவைவிட அதிகரிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. அதாவது முந்தைய இரண்டு இறக்குமதி அளவைக் காட்டிலும் இது அதிகரிக்கக் கூடாது என்றும் விதி உள்ளது. மேலும் ஏற்றுமதி செய்யப்படும் தங்கத்தின் அளவும் குறிப்பிடப்பட வேண்டும். அதற்கான சான்றிதழையும் அளிக்க வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது.

முந்தைய மூன்று இறக்குமதி அளவில் 20 சதவீதம் ஏற்றுமதி ஆகியிருக்கவேண்டும். இதன்படி இறக்குமதி, ஏற்றுமதி அளவு உள்ளனவா என வங்கிகள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஆர்பிஐ விதி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE