ரயில்வே துறையில் அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது குறித்து மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு செய்யும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
ரயில்வேயில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துடன் பேச்சு நடத்தப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்தார். அதிவேக ரயில், புறநகர் ரயில் போக்குவரத்து இணைப்பு, அதிவிரைவு ரயில் போக்குவரத்துக்கான தண்ட வாளம் மற்றும் துறைமுகம், சுரங்கங்களை இணைப்பதற்கு ரயில் தண்டவாளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் வெளிநாட்டு நிறுவனங்களை இணைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
தற்போது எம்ஆர்டிஎஸ் எனப்படும் பெருநகர ரயில் போக்குவரத்துத் திட்டத்தில் மட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. வேறெந்த பணிகளிலும் அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப் படவில்லை.