முன்னுரிமை பங்குதாரர் (Preference Shareholder),
சாதாரண பங்குதாரர் (ordinary shareholder) - என்றால் என்ன?

By இராம.சீனுவாசன்

முன்னுரிமை பங்குதாரருக்கு சில முன்னுரிமைகள் உண்டு. ஒவ்வொரு வருடமும், லாபத்தைப் பிரிக்கும்போது, இவருக்கு குறிப்பிட்ட அளவு ஈவுத்தொகையைக் கண்டிப்பாக அளிக்கவேண்டும், அதன் பிறகு மீதமுள்ள லாபத்தொகையை சாதாரண பங்குதாரர்க்கு ஈவுத்தொகையாக கொடுக்கவேண்டும்.

ஒரு நிறுவனத்தைக் கலைக்கும்போது, அதன் கடன் போக மீதமுள்ள சொத்தை பிரிக்கும்போது, முதலில் முன்னுரிமை பங்குதாரரின் பங்குக்கு ஏற்ற சொத்தை கொடுத்துவிட்டு, மீதமுள்ள சொத்தை சாதாரண பங்குதாரர்க்கு பிரித்துக் கொடுக்கவேண்டும்.

பொதுவாக ஒரு நிறுவனத்தின் பொதுக் குழு கூட்டத்தில் சாதாரண பங்குதாரருக்குத்தான் வாக்களிக்கும் உரிமை இருக்கும், ஏனெனில் அவர்தான் அதிக ரிஸ்க் எடுத்து நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

பங்கை திரும்ப வாங்குதல் (share buyback)

ஒரு நிறுவனம் தனது பங்கினை தானே வாங்கிக்கொள்வது shares buyback எனப்படும். இதனால் பொதுவில் உள்ள பங்கின் அளவைக் குறைக்க முடியும். ஒரு நிறுவனத்திடம் உபரி பண இருப்பு உள்ளபோது, அதனை பங்குதாரர்களுக்கு தரும் பொருட்டு, தன்னுடைய பங்கினை தானே வாங்கும் திட்டத்தை நிறுவனம் செயல்படுத்தும். இவ்வாறு செய்வதால், பொதுவில் உள்ள பங்கின் அளவு குறையும், அதனால், எதிர்காலத்தில் ஒவ்வொரு பங்கின் லாபம் ஈட்டும் அளவும் அதிகரிக்கும் பங்கின் விலையும் அதிகரிக்கும்.

பங்கு பதிவேடு (Share Register)

ஒரு நிறுவனத்தில் உள்ள பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்களின் விவரங்களும், ஒவ்வொருவரும் வைத்திருக்கும் பங்குகளின் எண்ணிக்கையும் பங்கு பதிவேட்டில் இருக்கும். பங்கு பத்திரம் கைமாறும்போதெல்லாம் இந்த பதிவேட்டிலும் அந்த மாற்றங்கள் எழுதிவைக்கப்படும். இந்த பங்கு பதிவேட்டில் உள்ளது போல்தான் ஒவ்வொரு பங்குதாரரின் வாக்குகளும், ஈவுத்தொகைகளும் கொடுக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE